கணித விதியும் மனித விதியும்
''விதி'' - நமக்கு கஷ்டம் வரும்போது மட்டும் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை. மனிதன் தனக்கு தாங்க முடியாத வேதனைகள், சோதனைகள் ஏற்படும்போது ''என்ன செய்வது? எல்லாம் விதி!'' என்று கூறி தமக்கு ஏற்பட்ட வேதனையை அல்லது சோதனையை தனக்கு மீறிய சக்தியின் (கடவுளின்) மீது பாரத்தைப்போடுவதன் மூலம் அவனது மனம் நிம்மதியடைகிறது.
நாத்திகர்கள் கடவுளை நம்ப மறுப்பதற்கும் இந்த விதிதான் காரணமாக இருக்கிறது. எல்லாம் கடவுள் செயல் என்றால், ஏன் சுனாமி ஏற்பட வேண்டும்?, ஏன் பொருளாதார - கல்வி இன்னபிற ஏற்றத்தாழ்வுகள்? இப்படி நிறைய கேள்விகள் அவர்களை வாட்டி எடுப்பதால்தான் அவர்கள் கடவுளை நம்ப மறுக்கிறார்கள். எல்லாமே இயற்கையான ஒன்று, சில விஷயங்களுக்கு கடவுளை நம்புபவர்கள் காரணம் என்பது அவர்களின் வாதம்.
திறமை உடையவன் முன்னேற வேண்டும். இது இயற்கை. ஆனால் திறமையில்லாத பலர் முன்னேறிய நிலையிலும், (மதத்தால் பிற்படுத்தப்படாத) திறமையுடைய பலர் பின்னேறிய நிலையிலும் இருப்பதையும் நாம் காண்கிறோம். இதற்கு என்ன காரணம்? இயற்கை சீற்றம் ஏற்படுவதைப் போன்று சிலர் விஷயத்தில் மட்டும் இயற்கை விதிவிளக்கு அளிக்கிறதா? கடவுள் நம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை இதற்குக் காரணம் விதிதான். இங்கு தருமி அவர்களும், அவருக்குப் பின்னூட்டமிட்டவர்களும் விதியைக் குறித்து எழுப்பிய வாதங்களுக்கு எமது பதில் இதுதான்...
விதி என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். அதை விளக்குவதும் விளங்கிக் கொள்வதும் கடினம். இறைவன் விதியை நம்பச் சொன்னதால் நாம் நம்புகிறோம். அதனைக் குறித்து அதிகம் விவாதிக்க வேண்டாம் என்று நபியவர்களால் தடுக்கப்பட்டுள்ளோம். அதற்கு எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் அது மனித அறிவுக்கு எட்டாத ஒரு விஷயமே. ஆனால் அதற்கு உதாரணமாக கணினையைக் கூறலாம்.
நாம் அச்சிடும் எழுத்துக்களை கணினி ஒரு எழுத்துவடிவமாக எடுத்துக் கொள்கிறது. இங்கு நான் அச்சிட்டதால் தான் இவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்று எவரும் கூற முடியாது. நமக்குத் தெரியாமல் பல பரிமாற்றங்கள் உள்ளே நிகழ்கின்றன. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் (Predetermind) அவை செயல்படுகின்றன. எனவே புகழ் அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்தவருக்கே போய்ச்சேரும் என்பதை நாம் மறுக்கவியலாது.
அதே சமயம் 'அ' என்பதை அச்சுக்கோர்ப்பதற்கு குறிப்பிட்ட விசையைத் தட்டாமல் வேறு விசையைத் தட்டினால் 'அ' வராது என்பதும் நாமறிந்த உண்மை. இது நம்முடைய தவறுதானே தவிர ஏற்கனவே முடிவு செய்தவரின் தவறாகாது. இல்லை... இல்லை.... ஏற்கனவே முடிவு செய்தவர்(Creator)தான் தவறாக செய்துவிட்டார் என்று நாம் கூறினால் நம்மை என்னவென்று சொல்வது.
கணினியில் அச்சிடுவதற்கு மட்டுமின்றி கணினியில் பயன்படுத்தப்படும் அனைத்து செயல்பாடுகளுக்கும் இது பொருந்தும்.
மீண்டும் கூறுகிறேன்.... இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படித்தான் செயல்படுகிறது என்று எம்மால் உறுதியாகக் கூற முடியாது. காரணம் இது விஞ்ஞானம் இல்லை. விஞ்ஞானத்தில் வேண்டுமானால் இதுதான் சரி என்று கூறிவிடலாம். பின்பு வேறொருவர் வந்து அவர் கூறியது அத்தனையும் தவறு, இதுதான் சரி என்று கூறி, புதிய விஞ்ஞானம் உண்டாகலாம். அப்படி மாற்றங்களும் நடந்து உள்ளன. ஆனால் கடவுள் நம்பிக்கையில் அவ்வாறு மாற்றம் செய்ய முடியாது.