Saturday, August 13, 2005

தொகுதி சீரமைப்பு

ஒவ்வொரு தொகுதியிலும் சமமான வாக்காளர்கள் உள்ளவாறு தொகுதிகளை பத்தாண்டுகளுக்கு ஒரு முறை சீரமைக்க வேண்டியது அவசியமாகும். தேர்தல் ஆணையர் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவர் கொண்ட தொகுதி சீரமைப்புக் குழு இப்பணியை மேற்கொள்ளும். ஆனால் 1976ஆம் இயற்றப்பட்ட சட்டதிருத்தம் மூலம் இப்பணி தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது. இது தொகுதிகளின் அமைப்பில் மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது. மிக அதிகமான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக டில்லி புறநகர் தொகுதி உள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை 33,68,399. 39,033 வாக்களர்களை மட்டுமே கொண்டு மிகக் குறைந்த வாக்களர்களைக் கொண்ட தொகுதியாக இலட்சதீவு தொகுதி உள்ளது. 2001 மக்கள் தொகைக்கேற்ப தொகுதிகளை சீரமைக்கும் பணி 2003, டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் தொகுதி சீரமைப்புப் பணி

சென்னை மாகாணமாக இருந்த போது 375 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அக்டோபர் 1, 1953ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டபின் தொகுதிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 231 ஆக இருந்தது. 1956, நவம்பர் 1 மலபார் மாவட்டங்கள் கேரளாவுடன் இணைந்த பின்னர் 190ஆக ஆனது.

1956ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி சீரமைப்பு பணியின் போது சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்த்தப்பட்டது.

1959ஆம் ஆண்டு ஆந்திராவுடன் மேற்கொண்ட எல்லைச் சீரமைப்பினால் சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்தது.

1961ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘இரட்டை உறுப்பினர் தொகுதி (நீக்கம்) சட்டத்தின்படி, 38 இடங்கள் நீக்கப்பட்டன. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கை 206 ஆக நீடித்தது.

1965ஆம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி சீரமைப்பின் போது சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்த்தப்பட்டது. இதில் 42 இடங்கள் S.C. பிரிவினருக்கும், 2 தொகுதிகள் S.T. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஆங்கிலே-இந்தியன் மக்களிலிருந்து ஒருவரை அரசின் பரிந்துரைப்படி கவர்னர் உறுப்பினராக நியமிக்கிறார்.

1967 ஜூலை 18ஆம் நாள் சென்னை மாகாண சட்டமன்றத்தில், சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது 1968ஆம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு சட்டமன்றம் மாற்றம் பெற்றது.

அன்றிலிருந்து இன்றுவரை 234 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் தொகுதி சீரமைப்பின்படி, சில தொகுதிகள் நீக்கப்பட்டு, சில புதிய தொகுதிகள் ஏற்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. அந்தந்த பகுதி மக்களிடம் தொகுதிகள் நீக்கம் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல்வாதிகள் மிரட்சியுடன் புதிய ஜாதிக் கணக்கு போடத் துவங்கியுள்ளனர்.

0 பின்னூட்டங்கள்: