Wednesday, November 29, 2006

முல்லைப் பெரியாறு - ஒரு கேரளீய பார்வை

சமீப நாட்களாக ஒரு நாளைக்கு பல முறை "முல்லைப் பெரியாறு" என்ற பெயர் காதில் பட, அது என்னதான் பிரச்சனை? கேரளம் ஏன் எதிர்க்கிறது? என்பதை அறிய முற்பட்டு "மாத்யமம்" என்ற மலையாள நாளிதழில் நவம்பவர் 27ஆம் இடம்பெற்ற ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்...

144 ஆண்டுகளுக்கு முன்பு (1862ல்) இங்கு ஒரு அணை கட்ட வேண்டும் என்று பிரிட்டீசாரின் பிரதிநிதியாகிய மதராஸ் ஆளுநர் திருவிதாங்கூர் அரசரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில் இருந்த அரசர் சுமார் 25 ஆண்டுகள் சம்மதம் தெரிவிக்காமலேயே தள்ளிப்போட்டார். அதற்கு மேலும் அவரால் சமாளிக்க முடியாமல் 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அரசர் இவ்வாறு கூறினார். 'என்னுடைய இதயத்தில் ஓடுகின்ற இரத்தத்தில் நுழைத்துதான் இதனை நான் செய்கிறேன்'.

ஆனால், மக்களாட்சியில் சிறந்த ஆட்சியாளர்கள் என்று நாம் கருதுபவர்கள் ஆட்சி செய்த போது, 1970 மே 29ஆம் நாள் நம்முடைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தம் முன் யோசனை இல்லாத நம் செயல்பாட்டை உணர்த்துகிறது. உலகம் முழுவதும் அணைகளைக் குறித்த அறிவும் அனுபவங்களும் நம் முன்பாக இருந்தும் நாம் இதனை செய்தோம். 1956ஆம் ஆண்டு மாநில புணர்நிர்மான சபை ஏற்படுத்தப்பட்டபோது, மாநிலங்களுக்கிடையே ஏற்கனவே இருக்கின்ற ஒப்பந்தங்கள் புதுப்பிப்பதற்கும் நீக்குவதற்கும் வாய்ப்பு இருந்தபோது நாம் அதனை செய்யவில்லை. ஒரு அணை 999 வருடங்கள் நீடித்திருக்காது என்பதைக்கூட அறியாதவர்களாக நம்முடைய ஆட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள்?

பாதுகாப்புதான் இன்றைய முக்கிய பிரச்சனை. 136 அடிக்குமேல் நீர் தேக்கினால் பிரச்சனை என்ற ரீதியில் நடக்கின்ற பிரச்சாரம் தவறானதாகும். நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அணையில் நீர் தேக்குவது உலகில் நான்கு அணைகளில் மட்டுமே. இதில் மற்ற மூன்று அணைகளிலும் டீகமிஷன் செய்யப்பட்டுவிட்டது. இவற்றில் பாதி அளவுக்கு மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. இதில் நான்காவதாக உள்ளதுதான் முல்லைப் பெரியாறு.

ரிக்டர் அளவுகோலில் 4-5 அளவு பூகம்பம் ஏற்பட சாத்தியமுள்ள இடுக்கியில்தான் இது உள்ளது. பூகம்பம் ஏற்பட்டால் நீரின் அளவு குறைவாக இருந்தாலும் அணை உடையும். இடுக்கியில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் முல்லைப் பெரியாறின் நீர் முழுவதும் 3 - 3.30 மணி நேரத்தில் வெளியாகி, இதன் மூலம் இடுக்கியின் மற்ற மூன்று அணைகளில் ஒன்றை அது தகர்க்கும். இது லோவர் பெரியாறு, பூதத்தான் அணை போன்றவற்றையும் தகர்த்து நான்கு மாவட்டங்களில் பிரளயத்தை உண்டாக்கும். முல்லைப் பெரியாறில் 130 அடி நீர் இருந்தாலும் இப்படி நடக்க வாய்ப்பு உண்டு என்பதுதான் உண்மை.

இப்பிரச்சனையில் அனைவரும் ஏற்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மூலம் பரிசோதனை செய்வதுடன், இத்தகைய அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை எதிர் கொள்ள டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் பிளானும் தீட்ட வேண்டும். இதற்காக உலக அணை கமிஷன், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் உதவியை நாடலாம். எந்த வெளிநாட்டு நிறுவனம் பரிசோதனை செய்தாலும் முல்லைப் பெரியாறில் 75 முதல் 80 அடிக்கு மேல் நீர் தேக்கக் கூடாது என்றே கூறுவர்.

இதற்கு அவசியமில்லை; உச்ச நீதிமன்றம் எல்லாவித சோதனைகளையும் செய்தபின்னர்தான் தீர்பபு கூறியுள்ளது என்று தமிழ்நாடு வாதிக்குமானால், கேரள அரசு அதனை அங்கீகரிக்க வேண்டியதில்லை. மக்களின் உயிர் மற்றும் உடைமை குறித்த அச்சத்தை தீர்க்கும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. எனவே கேரள அரசு வேறு ஒரு கோரிக்கையை வைக்க வேண்டும். இந்த அணை உடைந்தால் ஏற்படுகின்ற அனைத்து சேதங்களுக்கும் தமிழ்நாடு பொறுப்பேற்பேற்று அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு எழுதிக் கொடுக்க வேண்டும்.

மனித உயிரின் விலையை நிர்ணயிக்க இயலாது என்றாலும் ஒரு காப்பீட்டு நிறுவனம் மனித உயிருக்கு அளிக்கும் மரியாதையையாவது தமிழ்நாடு அளிக்க வேண்டும். மரணம் அடையும் ஒவ்வொரு உயிருக்கும் 5 கோடியும், சொத்துகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு அவற்றின் மதிப்பிற்கேற்பவும் நட்ட ஈடு அளிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

---
இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருப்பின் கேரளாவின் அச்சமும், எதிர்ப்பும் சரி என்றே படுகிறது. பிரச்சனை வந்தபின் செயல்படுவதைவிட வருமுன் செயல்படுவதே நல்லது.

Tuesday, November 14, 2006

அல்ஜஸீரா ஆங்கிலம்

தொடங்கப்பட்ட நாள் முதல் அரபுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திக் கொண்டுவரும் அல்ஜஸீரா தொலைக்காட்சி, மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களால் தவிர்க்க முடியாத ஊடகமாக அன்று முதல் திகழ்ந்து வருகிறது.

1996ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தோஹா - கத்தரில் தொடங்கப்பட்ட இத்தொலைக் காட்சி, அரசியல் குறுக்கீடுகள் இன்றி செயல்பட்டு வருகிறது.

இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு போர்களான ஆப்கன் மீதான தாக்குதலையும், இராக் மீதான தாக்குதலையும் உலகம் பார்த்தது அல்ஜஸீரா மூலமே. அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டுப் படைகளின் களவானித் தனத்தையும், பொதுமக்கள் அடைந்த பாதிப்புகளையும் அல்ஜஸீரா வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதனால் சினமுற்ற அமெரிக்கா அல்ஜஸீரா நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரியதாக தகவல்கள் வெளியானது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த அல்ஜஸீரா, ஆங்கில ஒளிபரப்புச் சேவையை நாளை (15-11-2006) முதல் தொடங்குகிறது. தோஹா, கோலாலம்பூர், லண்டன் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஒளிபரப்பு மையங்களை இதற்காக ஏற்படுத்தியுள்ளது.

பி.பி.சி. மற்றும் சி.என்.என். போன்ற மேற்கத்திய ஊடகங்களின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத அல்ஜஸீரா, ஆங்கிலத்தில் கால்பதிப்பது மேற்கத்திய ஊடகங்களுக்கம் ஆட்சியாளர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

பி.பி்.சி., சி.என்.என். போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்த சிலரும் அல்ஜஸீராவில் இணைந்துள்ளனர்.

அல்ஜஸீரா என்றுமே அரசுகளின் ஊடகமாக இருந்ததில்லை; அது மக்களின் ஊடகமாகவே இருந்துள்ளது என்பதற்கு அது சந்தித்து வரும் தாக்குதல்களே ஆதாரமாகும்.

செய்திகளை மேற்கிலிருந்து பார்த்து வந்த உலகம், இனி மத்திய கிழக்கிலிருந்தும் பார்க்கும் என்பது திண்ணம்.

Saturday, April 08, 2006

கோவை சிறையில் எட்டு ஆண்டுகள் - Follow up

மார்ச் 15 அன்று 'கோவை சிறையில் எட்டு ஆண்டுகள்' என்று தலைப்பில் பதிந்திருந்தேன். இந்த மாதம் விடியல் வெள்ளி என்ற மாத இதழில் வெளியான கட்டுரை அதன் தொடர்பானது என்பதால் அதை அப்படியே இங்கு தருகிறேன்.

----
கோவையில் ஒரு கொடுமை!

அமைதிப்பூங்காவாகத் திகழ்ந்தது தமிழகம். ஆனால் 1997ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி கோவையில் 19 முஸ்லிம்களை உயிரோடு எரித்தும், கொன்றும் சுட்டெரிக்கும் சுடுகாடாய் ஆக்கினார்கள் வெட்டியான்களாய் மாறிய காவி வெறியர்கள். அதனைத் தொடர்ந்து கோவையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் அப்பாவி முஸ்லிம்கள் பலரைக் கைது செய்தது தமிழக காவல்துறை. இன்று 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பிணையில் விட மறுத்து இவ்வழக்கை ஜவ்வு மிட்டாயாய் இழுத்துச் செல்கின்றனர். ஆரம்பத்தில் மெகா சீரியல்களுடன் போட்டியிட்ட இவ்வழக்கு இன்று தினத்தந்தியில் வரும் சிந்துபாத் தொடருடன் போட்டியிடத் துணிந்துள்ளது. 'தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி' என்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது நீதிதேவதை.

கொடுமை என்னவென்றால் இவ்வழக்கில் கைதாகியுள்ள சர்தார் மற்றும் அப்துல்லாஹ் (எ) சிவக்குமார் - இவ்விருவர் மீதும் FIR பதிவு செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை எவ்விடத்திலும் இவர்கள் பெயர் இல்லை. எந்த ஒரு சாட்சியோ, ஆவணமோ இவர்களுக்கு எதிராக இல்லை. இவ்வளவு 'இல்லைகள்' இருந்தும் 8 வருடமாக அநியாயமாக சிறையில் வைத்துள்ளனர். இவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியது மட்டுமல்ல. இவர்கள் உயிருடன் வீட்டிற்குச் செல்வார்களா என்ற பீதி கேள்விக்குறியாய் கண் முன்னே வளைந்து நிற்கிறது.

ஆம்! 08.03.2006 அன்று பத்திரிகையில் 'குண்டுவெடிப்பு கைதிக்கு எய்ட்ஸ்' எனச் செய்தி வந்தது. சிறையில் தன் மகன்களை, கணவன்மார்களை 'நேர்காணல்' காண்பதற்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பதறி அடித்து அழுகையுடன் வந்தனர். அன்று நேர்காணல் அறையில் வெறும் அழுகையும் அச்சமும் 'எப்படி?' என்ற கேள்வியும் மட்டுமே ஒலித்தன.

16 வயதினிலே பொய்க் குற்றம் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்ட அப்பாஸ் என்ற அப்பாவி சிறுவனுக்கு இன்று வயது 24. இச்சிறுவனுக்கு எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் வருவதற்கு சிறையிலோ அல்லது வெளியிலோ செக்ஸ் ரீதியான எந்த முகாந்திரமும் இல்லை.

கோவை அரசு மருத்துவமனையின் மெத்தனப்போக்கால் இக்கொடிய விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பாஸிற்கு இருமுறை கோவை அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை நடந்துள்ளது. குடல்வால் (Appendix) அறுவை சிகிச்சையும் (அப்பொழுது 2 யூனிட் இரத்தம் ஏற்றப்பட்டது), இரண்டாவதாக கக்கத்தில் கொப்புளம் அகற்றும் சிகிச்சையும் நடந்துள்ளன. விசாரித்ததில் அரசு மருத்துவமனையிலேயே இரத்தம் ஏற்றிய போது வந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் STD (Sexual Transmission Desease) பிரிவின் தலைமைப் பேராசிரியர் மகாதேவனை விசாரித்தபோது, 'அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி உள்ளது. இரத்தம் தானமாக பெறும்போது பரிசோதனை செய்துதான் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இரத்தம் கொடுக்கும் நபருக்கு HIV கிருமி இருந்தால் அதன் கிருமிகள் 3 அல்லது 6 மாதங்களுக்குப் பிறகுதான் இரத்தத்தில் HIV கிருமி இருப்பது தெரியவரும். அதற்கு முன் இரத்த தானம் செய்பவர்களின் இரத்தத்தில் இருப்பது தெரியாது. அதனால் இவ்வாறு விபத்து நேருவதுண்டு. எல்லாம் இறைவன் கையில்தான் உள்ளது' என்று கூறினார். 'இதனைத் தவிர்க்க வழியே இல்லையா?' என்று கேட்டபொழுது, 'ஒன்றே ஒன்றுதான் உள்ளது. ஒழுக்கம் நிறைந்த NSS சிறுவர்கள், இளைஞர்களிடம் இரத்தானம் பெறுவதன் மூலமும் ஏற்கனவே பலமுறை இரத்ததானம் தந்தவர்கள் மூலமும் நாங்கள் தவிர்த்து வருகிறோம்' என்றார்.

இதே அரசு மருத்துவமனையில் ஒரு தம்பதியர் தன் குழந்தைக்கு சிகிச்சை செய்தனர். சிகிச்சைக்குப் பிறகு HIV பாஸிட்டிவ். தாய்க்கும் தந்தைக்கும் HIV கிருமி கிடையாது. வெளி உலகுக்குத் தெரியாமல் இன்னும் இரத்தத்தின் மூலம் எவ்வளவு பேருக்கு HIV தொற்றியுள்ளதோ என்பது இறைவனுக்கே வெளிச்சம்.

சரி பாதிக்கப்பட்ட அப்பாவிகளின் வாழ்க்கையை யார் திருப்பித் தருவார்கள்? யார் பொறுப்பு? இன்று சிறையில் இருப்பவர்களின் வீட்டுப் பெண்கள், 8 வருடம் கழித்து வரும் தனது மகன், கணவன் முழுதாய் ஆரோக்கியமாய், உயிருடன் திரும்ப கிடைப்பார்களா என்று எண்ண வேண்டியுள்ளது.


கோவை மத்திய சிறையிலிருந்து அபூஷாய்மா
சுட்டி: தி இந்து

நன்றி: விடியல்

Wednesday, April 05, 2006

தேர்தல் திருவிழா: இயக்குநர் பாக்யராஜ்

எம்.ஜி.ஆரால் தன்னுடைய கலை உலக வாரிசாக அறிவிக்கப்பட்டவரும், பிரபல (முருங்கைகாய் புகழ்) இயக்குநருமான பாக்யராஜ் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் தனி கட்சி தொடங்கி, பின்பு அதனைக் கலைத்துவிட்டு, மிக நீண்ட காலம் திரைத்துரை மற்றும் அரசியலில் பங்குபெறாமல் இருந்து வந்த பாக்யராஜ் சமீபகாலமாக மீண்டும் தன்னுடைய பயணத்தை இரு துறைகளிலும் துவங்கி வருகிறார்.

ஆனாலும் வரிசையாக திரைத்துறையினர் அ.தி.மு.கவில் இணைவதும், தி.மு.க.விலிருந்து விலகுவதுமாக (அல்லது ஒதுங்குவதுமாக) இருந்து வரும் நிலையில், தீவிர அ.தி.மு.க. விசுவாசியாக இருந்த அவர் தி.மு.க.வில் இணைந்திருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.

Friday, March 24, 2006

டோண்டு - இஸ்ரேல் - சமுத்திரா

கால்காரி சிவா என்பவர் என் அரேபிய அனுபவங்கள் என்ற தலைப்பில் தனக்கு அரேபிய நாடுகளில் ஏற்பட்ட அனுபவங்களை எழுதி வருகிறார். அதற்கு பின்னூட்டமளித்த டோண்டு அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்...

இந்த அரேபியன்களுக்கு திமிர் அதிகம். அதுவும் சவுதிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு இளப்பமே. இந்துக்களைப் பற்றி அவர்கள் அபிப்பிராயம் சொல்லிக் கொள்ளும்படியில்லை.
அவன்களிடம் போய் வேலை செய்யவேண்டும் என்பது துரதிர்ஷ்டவசமானதே.

நான் ஐ.டி.பி.எல்லில் வேலைக்கு சேர்ந்தபோது எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சிதான், ஒரு விஷயத்தைத் தவிர. அல்ஜீரியாவில் வேலை என்றார்கள். ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம். நல்ல வேளையாக அல்ஜீரிய வேலை இல்லை என்று ஆயிற்று. பிழைத்தேன்.

அன்புடன்,டோண்டு ராகவன்
---

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான அனுபவங்கள் கிடைக்கக்கூடும். அந்த வகையில் கால்காரி சிவாவுக்கு அவர் கூறுவது போன்றே நடந்திருந்தால் வருத்தப்படக்கூடியதே.

நான் துபையில் பணியாற்றியபோது எனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது. இராம.கி. ஐயா அவர்களும் தனக்கு இருவகையான அனுபவங்களும் கிடைத்தது என்று கூறுகிறார்.

அரேபிய நாடுகள் எதிலும் பணிபுரிந்திடாத டோண்டு அவர்கள், அரேபியர்களை எதிர்ப்பதற்குச் சொன்ன காரணம் எனக்கு வியப்பை அளித்தது. எனவே நான் இப்படி கேட்டேன்...

Dondu Said...
//ஐயோ இஸ்ரேலுக்கு விரோதியான அரபு நாடு ஒன்றுக்கு போக வேண்டியிருக்கிறதே என்பதில்தான் சோகம்.//

இஸ்ரேல் டோண்டு அய்யாவுக்கு தாய்நாடா? அல்லது இரத்த சம்பந்தம் ஏதேனும் உள்ளதா? இஸ்ரேலுக்கு விரோதி என்றால் இந்தியரான இவருக்கு என்ன வந்தது?

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ?

வழக்கம் போலவே இந்த கேள்விக்கு சமுத்திரா தன்னுடைய தேசபக்தி பதிலை இப்படி கூறுகிறார்...

எல்லாம் ஒரு நன்றி உனர்வு தான் அய்யா.

வேறு எந்த நாடு நமக்கு அவர்களின் வார்ரிசர்வுகளில் இருந்து அவசர-அவசரமாக அம்யூனிஷன் சப்பளை செய்தது கார்கில் போரின் போது?

டோண்டு அவர்கள் ஐ.டி.பி.எல்லில் வேலைக்குச் சேர்ந்தது 1981ஆம் ஆண்டு.

அதிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றது 1993 ஆண்டு.

கார்கில் போர் நடைபெற்றது தேசப்பற்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ள பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற 1999ஆம் ஆண்டு.

தகவல்களை கூகிளிலிருந்து மட்டுமே எடுத்துப்போட்டால் இப்படித்தான் இருக்கும். பாவம், இவர் என்ன செய்வார்? 21 வயது பாலகன் அல்லவா? ஆனாலும் டோண்டு அய்யாவுக்கான என் கேள்வி தொடர்கிறது.

Thursday, March 23, 2006

தேர்தல் திருவிழா: தி.மு.க. கூட்டணி தொகுதிகள்

தி.மு.க. கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கியுள்ள தொகுதிகள் விபரம் முழுமையாக இங்கு கிடைக்கிறது.

பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது முதலே கலைஞர் கூட்டணிச் சிக்கலை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி தனது சாதுர்யத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்றே கூறவேண்டும்.

மாறாக எதிர்முகாமில் 10முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தொகுதிகள் இறுதி செய்யப்படவில்லை.

Wednesday, March 15, 2006

கோவை சிறையில் எட்டு ஆண்டுகள்

1997ஆம் ஆண்டு கோவையில் சமூக விரோதிகள் சிலர் செய்த மாபாதக செயலான குண்டு வெடிப்பைத் தொடர்ந்து 158 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். இந்த செயலைச் செய்தவர்கள் எவராக இருந்தாலும் அவரைத் தண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கொலைக்கு கொலை என்ற இஸ்லாமிய அடிப்படையிலேயே மரண தண்டனை நிறைவேற்றினாலும் பொருத்தமானதே.

கைது செய்யப்பட்ட 158 பேரில் ஒருவர் சிறையிலேயே உயிரிழந்தார். சிறைவாசிகளின் குடும்பத்தினர் 59 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர். இவர்களுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது சம்பந்தமாக இதுவரை 1300 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் சர்தார் என்ற 24 வயது இளைஞனுக்கு (கைது செய்யப்பட்ட போது இவருக்கு வயது 17) ஒரு சாட்சியும் அளிக்காத நிலையில் இந்த இளைஞனுக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டும் இல்லை என்பது நன்கு தெரிந்திருந்தும், அந்த இளைஞனின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பலருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்தாலும் தண்டனைக் காலமாக 3 அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனைதான் கிடைக்கும். ஆனால் அதையும் தாண்டி சிறையில் இருக்கிறார்கள். கொலைக் குற்றம் மற்றும் பொடா வழக்குகளில் தமிழக அரசால் கைது செய்யப்பட்ட ஜெயந்திர் மற்றும் வை.கோ. போன்றவர்களுக்கு ஜாமீன் கொடுப்பதை தமிழக அரசு தெரிவித்தும் ஜாமீன் வழங்கப் பட்டது. இவர்கள் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்றவர்கள்; வழக்கின் போக்கையே மாற்றும் செல்வாக்கு அவர்களுக்கு உள்ளது என்றெல்லாம் வாதிடப்பட்டது. ஆனாலும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். கோவை சிறைவாசிகளைப் பொறுத்தவரை இப்படி எந்த அதிகாரமும் அவர்களுக்கு இல்லை. பின் ஏன் பிணையில் விடுவிக்கப்படவில்லை.

இது குறித்து நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில் என்.கே. பிரமசந்திரன் மே4, 2005 அன்று இப்படி கேட்கிறார்: நமது நீதி பரிபாலன முறை குறித்து முழு நாட்டிடமும் ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். சாட்சியங்கள், விசாரணைகள், குறுக்கு விசாரணைகள் இத்யாதி முடிவடைந்து, அப்துந் நாஸர் மதானி அப்பாவி என்று தெரியவந்தால், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக அவர் சிறையில் இருந்ததற்கு யார் பொறுப்பேற்பார்? இது மிக முக்கியமான கேள்வியாகும். இதற்கு சரியான பதிலை நாம் காண வேண்டும்.

இவ்வழக்கின் குறுக்கு விசாரணையின் போது வழக்கறிஞர் திரு பி. பால்பாண்டியன், வழக்கின் முக்கிய புலணாய்வு அதிகாரியான ராஜசேகரிடம் கேட்ட கேள்வியும், அவரின் பதிலும்....

கேள்வி: இவ்வழக்கில் எதிரிகள் 74 அப்துல் சலாம், 75 அப்துல் சுக்கூர், 76 காதர், 77 ஜமேஷா, 79 ஹசன், 82 பஷீர், 83 அப்துல் சத்தார், 86 அபுதாகிர், 87 ஜப்பார், 90 கலந்தர் பாட்சா, 93 மொகமது அலி, 95 பிலால், 97 சிராஜுதீன், 98 லியாகத் அலி, 100 நஷீர் மற்றும் 159 குலாம் ஆகிய நபர்களுக்கு எதிராக ஏதாவது சாட்சிகள், இந்த எதிரிகள் குற்ற நிகழ்விற்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவோ அல்லது கூடிக்கலந்து பேசியதாகவோ வாக்குமூலமோ அல்லது விபரமோ எதுவும் அளித்ததாக உங்கள் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதா?

பதில்: மேற்சொன்ன எதிரிகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு சாட்சிகளின் வாக்கு மூலங்களில் மேற்சொன்ன எதிரிகள் குற்ற நிகழ்விற்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டதாகவோ அல்லது கூடிக்கலந்து பேசியதாகவோ அல்லது விவரம் வாக்குமூலங்களிலிருந்து எதுவும் வெளிப்படவில்லை.

பின் ஏன் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்படவில்லை? இவர்கள் முஸ்லிம்கள் என்பதால் மட்டுமா?

தொடர்புடைய சுட்டிகள்:
http://www.tmmkonline.org/tml/archieves/others/98_712.htm
http://www.tmmkonline.org/tml/others/109971.htm

இவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் சமீபத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆர்ப்பாட்டம் குறித்து அறிய: http://www.tmmkonline.org/tml/photos/28-2-06/28-2-06.htm

Saturday, March 11, 2006

தேர்தல் திருவிழா - ம.தி.மு.க.

சென்ற வாரத்தில் தமிழக அரசியலில் நிகழ்ந்த எதிர்பாரா திருப்பத்தைத் தொடர்ந்து, வை.கோ.வும் ம.தி.மு.க.வும் விவாதப் பொருளானார்கள். வலைப்பதிவிலும் இது குறித்து அதிகம் பேசப்பட்டது. வை.கோ.வின் இந்த செயலை நியாயப்படுத்திய பதிவர்களில் பெரும்பாலோர் சொன்ன கருத்து இதுதான்:

தி.மு.க.வுடன் இருக்கும் வரை ம.தி.மு.க. வளர்வதற்கான வாய்ப்பே
இல்லை. ம.தி.மு.க. தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சட்டமன்றத்தில் அதற்கென
உறுப்பினர் கிடையாது. கட்சியை வளர்க்க வேண்டுமானால் ம.தி.மு.க. அதிக தொகுதியில்
போட்டியிட்டு வெல்ல வேண்டும்.


தி.மு.க.வுடன் இருக்கும் வரை ம.தி.மு.க. வளர்வதற்கான வாய்ப்பே இல்லை.

பொதுவாகவே எந்த ஒரு கட்சியானாலும் தங்கள் கட்சி வளரவேண்டும் என்பதையே விரும்புவார்கள். காங்கிரஸ் கட்சி முதல் கடைசியாகத் தோற்றுவிக்கப்பட்ட பு.தா. இளங்கோவனின் பாட்டாளி முன்னேற்றக் கழகம் வரை அனைவருக்குமே இந்த விருப்பம் உண்டு. தங்கள் கட்சி வளர வேண்டும் என்ற நோக்கத்தை வேறு வார்த்தைகளில் சொல்வதானால் மற்ற கட்சிகள் வளரக் கூடாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நோக்கம் எல்லா கட்சிகளுக்குமே உண்டு. உதாரணமாக 4ஆம் நிலையில் இருப்பதாக கருதப்படும் ம.தி.மு.க. ஐந்தாம் நிலைக்கு தள்ளப்படக் கூடாது என்றால் விஜயகாந்தின் கட்சி வளரக்கூடாது என்பது ம.தி.மு.க.வின் நோக்கம். வை.கோ. எப்படி விஜயகாந்தின் கட்சி வளரக்கூடாது என்று விரும்புவாரோ அப்படியே பா.ம.க.வும் விரும்பும். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என அனைத்து கட்சிகளின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்கும். இதில் கருணாநிதி மட்டும் எப்படி வித்தியாசப்படுகிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தி.மு.க.வை ம.தி.முக.வின் வளர்ச்சிக்கு தடையாக சொல்லப் படுவதிலிருந்து தி.மு.க.வின் அழிவுதான் ம.தி.மு.க.வின் வளர்ச்சி என்று சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் எனக்குப் புரிகிறது.

ம.தி.மு.க. தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சட்டமன்றத்தில் அதற்கென உறுப்பினர் கிடையாது.

ம.தி.மு.க.வின் தலைமைதான் இதற்கு பொறுப்பாக வேண்டும். கட்சி தொடங்கப்பட்ட பின் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தல் எதிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவில்லை. 1996ல் நிகழ்ந்த மாபெரும் எதிர்ப்பு அரசியலில் பதவியிலிருந்த கட்சியே பரிதாப நிலையை எட்டியதால், ம.தி.மு.க.வும் பிரதிநிதித்துவம் பெறமுடியவில்லை. 2001ல் ஜெயா அமைத்த மகா கூட்டணியினாலும் இந்த நிலை ஏற்பட்டது. இதற்கு எந்த வகையில் கருணாநிதி பொறுப்பாவார்?

கட்சியை வளர்க்க வேண்டுமானால் ம.தி.மு.க. அதிக தொகுதியில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்.

அதிக தொகுதியில் போட்டியிடுவதால் கட்சிக்கு பரவலான அறிமுகம் கிடைக்க வாய்ப்புண்டு என்பதை மறுக்கவில்லை. 1996ஆம் ஆண்டு வை.கோ. இதைதான் செய்தார். தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் ம.தி.மு.க.வின் கொடி மட்டுமே இருந்த நிலையையும் 1997ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நானே பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகமான தொகுதியில் போட்டியிட்டு வென்றால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த வாதம் உண்மையானால் 1996ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருந்த தி.மு.க. 2001ல் தேய்ந்து போனதின் காரணம் என்ன? ஒவ்வொரு முறையும் சட்டமன்றத்தில் ஓரளவு உறுப்பினர்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்டு கட்சிகள் ஏன் வளரவில்லை. 2001ல் 21 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. எந்த அளவு வளர்ந்திருக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் காணவேண்டும். இவற்றுக்கு பதில் கண்டால் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது தற்போது கூட்டணி கணக்கின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதை விளங்கலாம்.

ம.தி.முக. - பா.ம.க. ஒப்பீடு

ம.தி.மு.க.வின் வளர்ச்சியை பா.ம.க.வுடன் ஒப்பிட முடியாது. பா.ம.க.வின் வளர்ச்சி (அதன் செயல்முறைகளை மாற்றிக் கொண்டாலன்றி) இத்துடன் நிறைவு பெற்றுவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆனால் ம.தி.முக.வின் தளம் அத்தகையதன்று. அதற்கென சாதி சார்பு எதுவும் ஊடகங்களால் மட்டுமின்றி எதிர்கட்சிகளாலும் கற்பிக்க முடியவில்லை. இத்தகைய பரந்த தளத்தில் ஏற்கனவே இருக்கும் பெரிய கட்சிகளுடன் போட்டியிட்டு வளர்த்தெடுப்பது எளிதான பணியன்று; விரைவில் சாத்தியப்படக் கூடிய ஒன்றும் அன்று.

Monday, March 06, 2006

தேர்தல் திருவிழா - வை.கோ.

தன்மானம், கொள்கையை தற்சமயம் ஜெயலலிதாவிடம் குத்தகைக்கு கொடுத்துள்ள வை.கோ. அவர்கள் குறித்து அ.தி.மு.க.வின் நாளேட்டில் வெளியான செய்தி.....



















நன்றி: தினகரன்

Sunday, March 05, 2006

புரட்சிப் புயல் வை.கோ. அவர்களுக்கு....

தமிழக அரசியல் கட்சிகள் சாதி சார்ந்தும், சுய முன்னேற்றம் சார்ந்தும் இயங்கி வந்த வேளையில், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, ''அரசியலில் நேர்மை; கொள்கையில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை'' என்ற புரட்சிகரமான முழக்கங்களுடன் தனி இயக்கம் கண்டீர்கள். அதுவரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றவராக இருந்திருந்தாலும், நீங்கள் தனி இயக்கம் கண்ட காலம் தமிழகம் முழுவதும் மாற்று தலைமையை எதிர்நோக்கியிருந்ததால், பரவலான வரவேற்பை பெற்றீர்கள்.

தமிழ், தமிழர் நலன் என்ற உங்களின் செயல்களால் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்களின் நன்மதிப்பையும் பெற்றீர்கள். அதன் காரணமாகவே - இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த அரசியல் தலைவர் மீதும் போடப்படாத ''பொடா'' சட்டம் உங்கள் மீது போடப்பட்ட போது, ''பாசிச ஜெயலலிதா அரசை தூக்கி எறிவோம்'' என்று சபதமெடுத்தீர்கள். தங்களின் இந்த சபதம் நிறைவேற வகைசெய்வோம் என்று நாங்களும் உறுதியெடுத்தோம்.

ஆனால் இன்று அதே பாசிச ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதமெடுத்த போது, எங்களை நாங்களே கிள்ளிப் பார்த்துக் கொண்டோம். இது கொள்கைக்காக அமைந்த கூட்டணியல்ல, தேர்தலுக்காக அமைந்த கூட்டணி என்று சொன்னபோது கொள்கையில் உறுதி தூள் தூளானது.

தொண்டர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்தான். ஆனால் அவர்களின் வாக்கு மற்றும் அவர்களின் உழைப்பு மட்டுமே தங்களின் இயக்கத்தை வளர்க்கும் என்று எண்ணிவிடாதீர்கள்.

இந்த செயலின் மூலம் கலைஞரின் அரசியல் சாணக்யம் குறித்து சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். மாறாக அவரின் (வாரிசு) நோக்கத்தில் அவர் உறுதியாக இருந்ததாலேயே நீங்கள் இன்று தன்மானம் போனாலும் பரவாயில்லை என்று பாசிச ஜெயலலிதாவுடன் இணைந்துள்ளீர்கள். உங்களின் இந்த செயல் மூலம் பலனை அனுபவிக்கப்போவது கலைஞர்தான்.

நாடாளுமன்றத் தேர்தலின்போது 62 நாட்களும் தமிழகத்தின் மூளைமுடுக்கெல்லாம் சென்று கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்டீர்கள். இன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 13பேர் அமைச்சராக ஆனதற்கு உங்களின் பிரச்சாரம் மிக முக்கிய காரணம். ஆனால் அந்த பிரச்சாரத்தை ஒலிபரப்பாத சன் தொலைக்காட்சி, இப்போது கண்டிப்பாக ஒலி பரப்பும். முதல்முறையாக எதிர்கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்த தலைவர் என்ற பட்டமும் உங்களுக்கு கிட்டும்.

இறுதியாக... என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நானும் சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்தியுள்ளீர்கள். தங்களின் அரசியல் ஆசான்கள் பதவிக்கு வந்தபின் உணர்த்தியதை தாங்கள் பதவிக்கு வருமுன்பே உணர்த்தியுள்ளீர்கள். நன்றி.

குறிப்பு:- இந்த கடிதம் உங்கள் முடிவை மாற்றாது என்பது தெரியும். "தாயின் பேச்சை கேட்காதவர், தமையன் பேச்சையா கேட்பார்?" என்று கலைஞர் கூட எள்ளி நகையாடி இருக்கிறார். இருந்தாலும் என் மன அமைதிக்காக இதனை எழுதியுள்ளேன்.

Wednesday, March 01, 2006

தேர்தல் திருவிழா - தேர்தல் நாள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி டாண்டன் பத்திரிக்கையாளர்களை இன்று மாலை 4.30 மணிக்கு சந்தித்து தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

தமிழ்நாடு மே 8

கேரளா ஏப்ரல் 22, 29, மே 3

மேற்கு வங்கம் ஏப்ரல் 17, 22, 27, மே 3, 8

பாண்டிச்சேரி மே 3, 8

அஸ்ஸாம் மே 03, 10

அடையாள அட்டை கேரளாவில் 100 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது 55 சதவீதம்தான் என்று கூறினார்.

சிறிய மாநிலங்களில் கூட பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் நடத்தப்படுவதன் இரகசியம் நாம் அறிந்ததுதானே....

Tuesday, February 28, 2006

நன்றி - ரங்கசாமி

பாண்டிச்சேரி சட்டமன்றத்தின் இறுதி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களுக்கு 13 சதவீத இடஒதுக்கீடு அளிக்க இந்த தீர்மானத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து தேர்தல் நேரத்தில் இத்தகைய தீர்மானம் தீட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், தமிழக முதல்வருக்கு வராத அக்கறை புதுவை முதல்வருக்கு வந்ததற்காக அவரை பாராட்டுகிறேன்.

தமிழக முஸ்லிம்கள் சார்பாக அவருக்கு மீண்டும் என் நன்றிகள்.

Monday, February 27, 2006

தேர்தல் திருவிழா - திருமா

தேர்தல் திருவிழாக் காட்சிகள் தொடங்கிவிட்டன. சமீபகாலமாக உடன்பிறவாச் சகோதரர்களாக வலம் வந்த மருத்துவர் இராமதாசு மற்றும் திருமாவளவன் இப்போது எதிர் எதிர் அணியில். பா.ம.க. போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

இராமதாசையும் திருமாவளவனையும் மோதவிடுவதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டுமே காய்நகர்த்தி அதிக தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்படுமாறு தொகுதிகளை ஒதுக்குவார்கள். குறைந்தது 5 தொகுதிகளில் வி.சி.க்கும் பா.ம.க.வுக்கும் நேரடிப் போட்டி இருக்கும் என்பது என் கணிப்பு.

விஜய காந்த் அல்லது பா.ஜ.க. இருவரில் ஒருவர் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய வாய்ப்புண்டு. ஏதேனும் ஒரு முஸ்லிம் லீகும் இடம் பெறும். (சிறுபான்மையினர் வாக்கு வேண்டுமே?) கார்த்திக்கும் இருப்பார் என்று நம்புவோம். இனி என்னவெல்லாம் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, February 07, 2006

பத்தாயிரமும் சமூக நீதியும்

நேற்று முதல் முறையாக மும்பை பங்குச் சந்தையின் குறியெட்டென் 10,000 புள்ளிகளைக் கடந்து, இன்று நிலை கொண்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியின் அளவாக இந்த குறியெட்டெண்ணும் கருதப்படுவதால் நாள்தோறும் செய்திகளில் முக்கியமாக இதனை நான் நோக்குவதுண்டு. ஏறுமுகமாக இருந்தால் மகிழ்வதுமுண்டு. ஆனால் சில நாள்களுக்கு முன் ''சமநிலைச் சமுதாயம்'' மாத இதழின் ஜனவரி 2006 பதிப்பில் ''பில்கேட்சும் நமது வல்லரசு கனவும்'' என்ற தலைப்பில் மு. அப்துர் ரஸாக் என்பவர் எழுதிய கட்டுரையில் இந்த புள்ளிவிபரங்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துடன் முழுதாக ஒன்றாவிட்டாலும் அவரின் பின்வரும் வரிகள் சாட்டையடிகளாக இருந்தன. இனி அவரின் கட்டுரையிலிருந்து....

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் பில்கேட்ஸ் மீதான வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, நாஸ்டாக் பங்குச்சந்தையில் மைக்ரோ சாப்டின் பங்குகள் வீழ்ச்சியடைந்தவுடன், அந்த வீழ்ச்சியின் வரைபடத்தைப் புகைப்பட நகல் எடுத்ததைப்போல் அதே நாளில் மும்பை பங்குச்சந்தை வீழ்ந்தது.

இந்தச் சரிவை உலகம் முழுவதும் பரவச் செய்தது மின் வணிகம். இதனால் ஏற்பட்ட இழப்பை இணையம், மின் வணிகம், செல்போன் போன்ற தகவல் புரட்சி சேவைப் பொருளாதாரம் சார்ந்த எந்த வசதிகளையும் அனுபவித்திராத இவற்றைப் பார்த்திராத உழைக்கும் மக்களின் உழைப்பின் மூலம்தான் ஈடு செய்தார்கள். இந்தியாவின் 90 விழுக்காடு மக்களை மறந்துவிட்டு, மேல்தட்டைச் சார்ந்த 10 விழுக்காட்டினர் மீது மட்டும் கவனம் செலுத்துவதன் விளைவு இது.

இணையத்தின் மூலம் நடைபெறும் மின்வணிகத்தில் ஒரு நாளைக்கு 1.5 டிரில்லியன் புரள்கிறது. இந்த தொகையில் 85 விழுக்காடு நாணயச் சூதாட்டத்தின் விளைவாகப் புரளும் தொகையாகும். இணையத்தின் மூலம் நடைபெறும் வர்த்தகத்தில் நூற்றுக்கு ஒன்றரை ரூபாய் மட்டுமே உண்மையாகப் பொருளை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வர்த்தகம். மீதி அனைத்தும் நிதி மூலதனத்தின் சூதாட்டம்தான். இணையத்தின் மூலம் நடைபெறும் இந்த மின் வணிகத்தின் மீது நம் நாட்டின் ரிசர்வ் வங்கிக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. கணினி, இணைய தகவல் தொழில் நுட்பப் புரட்சி எதை துரிதப்படுத்துகிறது என்பதற்கு இது உதாரணம்.

இது ஒரு வகையான மின்னணு யுத்தம். ஏழைநாடுகளுக்கு எதிரான மின்னணு யுத்தம். உலக முதலாளிகளே ஒன்று சேருங்கள் என அமெரிக்க மூலதனம் விடுக்கும் அறைகூவலைத்தான் நாம் எதிரொலிக்கிறோம். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இந்தியா உட்பட மூன்றாம் உலக நாடுகள் பன்னாட்டு நிதி உதவி நிறுவனங்களின் தயவில்லாமல் சுதந்திரமான திட்ட தயாரிப்புகள் சாத்தியமில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது. கடன் தருபவரின் சட்டமும், நீதியும் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம்.

நமது மண்ணின் விதைகள் எதுவாக இருக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. நமது நதிகள் எங்ஙனம் ஓடவேண்டும் என்பதை இனி உலக வங்கிகள் தீர்மானிக்கும். நமது வாழ்க்கை இனி உலக வர்த்தக மையத்தின் அதிகார வரம்புக்குட்பட்டதாக இருக்கும். உலகத்தை தன்வயப்படுத்த முனையும் முதலாளித்துவ சக்திகள் நமது சுதந்திரத்தையும், இறையாண்மையையும் இங்ஙனம் பறிக்கிறார்கள்.

இறக்குமதி செய்யப்பட்ட பசுமைப்புரட்சியால் உற்பத்தியைப் பெருக்கினோம். ஆனால். நமது மண்வளத்தை இழந்தோம். நமது மரபு விதைகள் கடத்திச் செல்லப்பட்டு முதலாளித்துவ ஜீன் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ''காட்'' ஒப்பந்தமும், காப்புரிமையும், ட்ரிட்சும், டிரிம்சும் நமது உரிமையை கவர்ந்து சென்றுள்ளன.

தொழில் நுட்பத்தையும், சமூக நீதியையும் எப்படி இணைக்கலாம்? இதுதான் இந்த நூற்றாண்டு எதிர்கொள்கிற சவால். தொழில் நுட்பத்தை எங்ஙனம் ஜனநாயகப்படுத்துவது? இன்று மூன்றாம் நாடுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை மட்டுமல்ல. அவர்களின் உற்பத்தி மையமாகவும் மாறுகின்றன. அமெரிக்காவில் வளர்ப்பு நாய்களுக்கு செலவாவதைவிட, குறைந்த கூலி இங்குள்ள தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் மாசாவதிலிருந்து அவர்களும் தப்பித்துக் கொள்கிறார்கள்.

செப்டம்பர் 11 நிகழ்வில் இறந்தவர்கள் 3000 பேர்தான். ஆனால் 1984ஆம் தேதி போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலையில் நடந்த கசிவு காரணமாக 13,000 பேர் இறந்தனர். இதற்குக் காரணமாக இருந்த ஆண்டர்சனைக்கூட அமெரிக்கா தண்டிக்கவில்லை.

நன்றி: சமநிலைச் சமுதாயம்

கட்டுரையின் ஒரு பகுதியை மட்டுமே தந்துள்ளேன். இதில் கூறப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனாலும் மனம் உறுத்துகிறது.

Saturday, February 04, 2006

கருத்துச் சுதந்திரமும் காழ்ப்புணர்வும்

கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை ஒன்றில் முஹம்மது நபி அவர்களை கேலிச் சித்திரம் வரைந்திருந்தனர். அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், அதற்கு வருத்தம் தெரிவிக்கும்படி கோரினர். அந்த பத்திரிக்கை வருத்தம் தெரிவிக்க மறுத்துவிட்டது.

அக்டோபர் 20ஆம் நாள் டென்மார்க்கில் உள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அந்நாட்டுப் பிரதமரைச் சந்தித்து புகார் செய்தனர். இதனாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஜனவரி 10ஆம் நாள் நார்வே பத்திரிக்கையொன்று அந்த கேலிச் சித்திரங்களை மறுபதிப்பு செய்தது. பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட சவூதி அரசு ஜனவரி 26ஆம் நாள் டென்மார்க் நாட்டுக்கான தன்னுடைய தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.

இந்நிலையில் சவூதி மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து டென்மார்க்கின் பொருள்களை விற்பனை செய்வதில்லை என்று முடிவு செய்கின்றனர். இதனை அறிந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகக் கழக தலைவர் பீட்டர் மண்டெல்சன் 'நார்வே-டென்மார்க் பொருட்களை புறக்கணிப்பது, ஐரோப்பிய யூனியனின் பொருட்களை புறக்கணிப்பதற்குச் சமமானது; சவூதி அரசாங்கம் இப்புறக்கணிப்பை கைவிடவில்லையென்றால், உலக வர்த்தக சபையில் முறையிட வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

ஜனவரி 30ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய சிலர் பாலஸ்தீனத்தின் காஜா பகுதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகத்திற்கு சென்று, மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரினர்.

ஜனவரி 31ஆம் நாள் டென்மார்க் பத்திரிக்கை மன்னிப்புக் கோரியது.

பிப்ரவரி 1ஆம் நாள் பிரான்சு, ஜெர்மன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டுப் பத்திரிக்கைகள் சித்திரத்தை மறுபதிப்புச் செய்தன.

இதன் பிறகே பிப்ரவரி 3ஆம் நாள் இந்தோனேசியா, இராக், பாலஸ்தீன், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும், இந்தோனேசியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் தாக்கப்படுகிறது. (இதை நான் ஆதரிப்பதாகக் கருதவேண்டாம்).

நன்றி: பி.பி.சி. அரப் நியூஸ்

இதைவிட சாத்வீகமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா எனத் தெரியவில்லை. தங்களுக்குப் பிடித்த கருத்தைச் சொல்ல தங்களுக்கு உரிமை உண்டு என வாதிடுவோர், தங்களுக்குப் பிடிக்காதவர்களின் பொருள்களின் பொருள்களை வாங்க மாட்டோம் என்ற கருத்தை ஏற்க மறுப்பது ஏனோ?

இது குறித்து வலைப்பூக்களில் பதியப்பட்ட பதிவுகளுக்கான பின்னூட்டங்களிலிருந்தும் பல காழ்ப்புணர்வுகள்.

நிலா கூறும்போது....

//கார்டூன்கள் வெளியிட்டது தவறு என்று வைத்துக் கொண்டால் கூட இவ்வளவு களேபரம் தேவையா என்று தோன்றுவதைத் தவிர்க்கமுடியவில்லை. எதிர்ப்புத் தெரிவிக்க எவ்வளவோ அமைதியான முறைகள் இருக்கின்றனவே. ஏன் மீண்டும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டும்? இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று நிரூபிக்க முயலலாமே?//

நிலா அவர்களே மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளை வரிசையாகப் படித்துப் பார்க்கக் கோருகிறேன்.

இதுகுறித்து டோண்டு அவர்கள்....

//ஹுஸேனை எதிர்த்து ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் ந்டத்தியபோது அதை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக சித்தரித்ததும் பல இசுலாமியர்கள் மற்றும் போலி மதச்சார்பற்றவர்கள் செய்ததே.//

என் மதத்திற்கு அப்பொழுது நேர்ந்த கொடுமை இப்பொழுது உன் மதத்திற்கு நேர்ந்துள்ளது என்று கூறுகிறார். அவருக்கு நம்முடைய கேள்வி.... அந்த ஓவியம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாக சித்தரித்த இஸ்லாமிய அறிஞர் ஒருவரையாவாது அவரால் அடையாளம் காட்ட முடியுமா?
மாறாக அல்லாஹ் குர்ஆனில், மற்றவர்கள் தெய்வமென வணங்குபவற்றை நீங்கள் ஏசாதீர்கள் என்று கூறியுள்ளான்.

//கராத்தே ஹுஸைனீ பத்திரிகையாளர்களை அழைத்து அந்த நிர்வாண படத்திற்கு அழகாக உடையை எழுதிப் பொருத்தினார்.// என்று கூறும் டோண்டு அவர்கள் இந்துக்கள் அந்தப் படத்திற்கு ஆடை அணிவிக்குமுன்பு ஆடை அணிவித்த கராத்தே ஹுசைனி அவர்கள் முஸ்லிம் என்பதை அறியாதவரா? ஏன் இந்த காழ்ப்புணர்வு?

பிற்காலங்களில் தோன்றிய தேசியமும், தேசியத்தின் அடையாளங்களும் மதிக்கப்பட வேண்டியவை என்று ஒத்துக் கொள்கிறோம். புஷ் தன்னுடைய நாய்க்குட்டிக்கு இந்தியா என்று பெயர் வைத்தால் கொதித்தெழுகிறோம். நாமே உருவாக்கிய நம்முடைய தேசியக் கொடி எரிக்கப்பட்டால் உணர்ச்சி வசப்படுகிறோம். அவனுடைய தனிப்பட்ட உரிமை என்று எவருமே, எந்நாட்டவருமே கருதுவதில்லை. ஆனால் தேசம் கடந்து, மொழி கடந்து உலக முஸ்லிம்களால் உயிரினும் மேலானவராகக் கருதப்படும் முஹம்மது நபியவர்களைக் கேவலம் செய்தால் பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் கூறினால் இது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறு என்னவாக இருக்கும்?

Friday, February 03, 2006

எகிப்திய சோகம்

வியாழன் மாலை 1300 பயணிகளுடன் சவூதிய அரேபியாவின் துபாஹ் துறைமுகத்திலிருந்து எகிப்தின் சஃபாகா துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த எகிப்திய கப்பல் கடலில் மூழ்கியது. பெருமளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. விமானங்கள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 12 உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Friday, January 27, 2006

இருவுள் (இரயில்) எரிப்பும் பா.ஜ.க.வும்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுக்கக் கோரி வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலிருந்து பா.ஜ.க. சார்பில் பாதயாத்திரை நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கியது. பாதயாத்திரையை தொடங்கி வைத்து பா.ஜ.க. மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, பாலாற்றில் அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் ரயில் மறியல் போராட்டம் நடக்காது. ரயில் எரிப்பு போராட்டம் நடக்கும் என்று கூறியுள்ளார்.

தேசியம் பற்றி வாய்கிழிய பேசும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரின் பேச்சு மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அறப்போராட்டம், நீதிமன்றத்தை நாடுதல் என்று எத்தனையோ சாத்வீகமான முறைகளில் பேராடாமல் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோம் என்று கூறியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றதினால் மட்டும் தீவிரவாத செயலை நியாயப்படுத்த முடியாது.

இதனையே தனித்தமிழ்நாடு கோருவோர் கூறியிருந்தால் ''தீவிரவாதிகள் அரசுக்கு மிரட்டல்'' என்று எழுதும் ஊடகங்கள் இதனை முக்கியத்துவம் இல்லாத செய்தியாகக் கருதுவது மிகவும் வேதனையான ஒன்று. அதுபோன்று கருணாநிதியோ அல்லது இராமதாசோ இப்படிக் கூறியிருந்தால் தேசப்பத்திரிக்கைளும் இங்கு வலைப்பதியும் தேசபக்தி பதிவர்களும் எப்படியெல்லாம் வெகுண்டெழுந்து பதிவிட்டிருப்பார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அவர்களைப் பொறுத்தவரை தேசபக்திக்கு ஜாதி அடிப்படையையே அளவாகக் கொண்டுள்ளனர் என்பது தெளிவு.

மேலும் அவர் பேசும்போது, இங்கு நடக்கும் பாத யாத்திரை போராட்டம் ஆந்திர மாநில மக்களுக்கும், ஆந்திர அரசுக்கும் எதிரான போராட்டம் அல்ல. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயக்கூலிகள் வாழ்க்கையில் இருள் வரக்கூடாது என்பதற்காக நடத்தப்படும் பாத யாத்திரையாகும் என்று கூறினார்.

ஆந்திர அரசு தமிழக்தின் உரிமையைத் தடுக்கிறது எனும் நிலை வரும்போது அந்த அரசுக்கு எதிராகத்தானே பேராடவேண்டும். ஆனால் அவர் ஆந்திர அரசை எதிர்க்வில்லை. பின் எதற்காகப் பேராடுகிறார் என்பதை பின்வரும் அவருடைய பேச்சு விளக்குகிறது.

மத்தியில் அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க. கூட்டணி கட்சிகள், பாலாற்று பிரச்சனையை பிரதமரிடம் சொல்லி தடுத்திருக்கலாமே? ஏன் தடுத்து நிறுத்தவில்லை? நாங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் பாலாற்று அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்தி இருப்போம். 7 மாவட்ட மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தாமல் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.

எதிர்வரும் தேர்தலை மனதிற்கொண்டுதான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தேர்தலில் பிரச்சாரத்திற்கு இந்த வீரவசனம் பயன்படும் என்பதை மனதில் இருத்திதான் இவ்வாறு பேசியுள்ளார். ஒரு மாநிலத்தின் பிரச்சாரத்திற்காக இரயிலை எரிப்போம் என்பவர்கள் இந்தியா முழுவதும் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகவே கோத்ரா இரயில் எரிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்ற எண்ணத்திற்கே வரவேண்டியுள்ளது.

திரு. டோண்டு அவர்கள் காந்தியைக் கொன்றதில் கோட்சேக்கு ஆழமான உள்நோக்கம் உண்டு என்று கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

Saturday, January 21, 2006

கோட்சேவும் டோண்டுவும்

டோண்டு அவர்கள் மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும் என்ற தலைப்பில் மலர்மன்னன் என்பவர் திண்ணையில் எழுதியதை அவரின் அனுமதியுடன் தன் வலைப்பூவில் பதிந்திருந்தார். முழு கட்டுரையையும் அவர் தன்னுடைய பதிவில் பதிந்ததிலிருந்து டோண்டுவும் மலர்மன்னனின் கருத்துடன் ஒன்றிப்போகிறார் என்ற எண்ணம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அந்த கட்டுரைக்கு மறுப்பாக நல்லடியாரும் இறைநேசனும் தனித்தனி பதிவுகள் மூலம் பதிலளித்து இருந்தனர். அதற்கு தன் சார்பு பதில் எதையும் கொடுக்க முடியாத டோண்டு மலர்மன்னனிடமே பதில் கேட்டு அதை தனியொரு பதிவாக இட்டிருந்தார். அந்தப் பதிவில் ஏதேனும் விளக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்து சென்றால் ஏமாற்றமே விஞ்சியது.

மலர்மன்னன் மற்றும் டோண்டு ஆகியோரின் வாதத்திறமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. (ரொம்ப புகழாதீர்கள் என்று டோண்டு சொல்வார் என்பதால் இது போதும்.) ம.ம. என்ன சொல்லவருகிறார் என்று எனக்குப் புரிந்ததை (நீல வண்ணத்தில்)எழுதுகிறேன். இதற்கு டோண்டு பதில் சொல்வார் என்பதற்காக அல்ல. அவரின் நிலையை அறிந்து கொள்வதற்காக. இந்த வாதத்தை தமிழ்மணத்தில் தொடங்கியவர் டோண்டு என்பதாலேயே கோட்சேவும் டோண்டுவும் என்று தலைப்பிட்டுள்ளேன். அவரை தனிப்பட்ட முறையில் தாக்கும் எண்ணம் இல்லை. இனி அவரின் பதிவிலிருந்து...


//நாதுராம் விநாயக கோட்ஸே இன்றைய பயங்கரவாதிகளைப் போல் ஒரு நபரைக் கொல்வதற்காகப் பல அப்பாவி உயிர்களைக் காவு வாங்கியவர் அல்ல.//

யாரைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிடுகிறோமோ அவரை மட்டும் கொலை செய்துவிட்டால், அவன் பயங்கரவாதியில்லை. மாறாக ஒருவரை கொலை செய்ய முனையும்போது மற்றவர்களும் இறக்க நேரிட்டால் மட்டுமே அது பயங்கரவாதம் என்று கூறுகிறார்.

//தன்னைக் குற்றுயிரும் குலை உயிருமாகச் சிதைத்துப் போடுவார்கள் என்பது தெரிந்தே அவ்வாறு வினையாற்றினார்.//

இன்றைக்கும் தற்கொலைப்படையினர் இவ்விதமே செய்கின்றனர். தீவிரவாதிகளும் தாங்கள் காவல்துறையிடம் மாட்டிக்கொண்டால் தங்கள் நிலை சின்னாபின்னமாகிப் போகும் என்று அறிந்தே தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் அதற்காக அவர்களின் செயலை நியாயப்படுத்த முடியாது.

//காந்திஜியைச் சுட்டுக் கொலை செய்த சமயத்தில் கோட்ஸேயின் வயது முப்பத்து ஒன்பது. நன்கு ஆலோசித்து, முடிவு எடுக்கும் வயது. வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் திடீர் என முடிவு செய்யும் பருவமல்ல.//

ஆக நன்கு சிந்தித்து சுயமாக சிந்திக்கும் நிலையில் உள்ள ஒருவன் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டால் அது தவறில்லை என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் பெரும்பான்மையோரும் திட்டமிட்டே இதுபோன்ற செயல்களில் செயல்படுகின்றனர்.

//அவர் மூர்க்கத்தனமான வெறி¤யூட்டப்படும், மூளைச் சலவை செய்யப்படும் மதரஸாக்களில் இளமை முதல் பயின்றவருமல்ல. மேலும் ஒரு பத்திரிகையின் ஆசிரியர். பெரிய படிப்பு ஏதும் படிக்காவிடினும் தனது தரப்பு நியாயத்தைத் தௌ¤வான ஆங்கிலத்தில் சொல்லத் தெரிந்து நீதிபதியை வியக்கச் செய்தவர்.//

எந்த கருத்தைச் சொல்லவேண்டுமோ அதை அங்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். அவர் மதரஸாக்களில் பயின்ற முஸ்லிமாக இருக்கவில்லை. மதரஸாக்களில் பயின்றோர்தான் தீவிரவாதிகள். காந்தியைக் கொன்றவர், கோட்சேயாக இல்லாமல் இஸ்மாயீலாக இருந்தால் சந்தேகமற அவர் தீவிரவாதி. நீதிமன்றத்தால் அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டாலும் கூட அவர் தீவிரவாதிதான். காரணம் இஸ்மாயீல் என்னும் பெயருடையவர் கண்டிப்பாக மதரஸாவில் பயின்றிருப்பார். அதுமட்டுமின்றி கோட்சேக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசத்தெரியும். இஸ்மாயீலாக இருந்தால் அதற்கு வாய்ப்பே இல்லை. (ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டுமென்பதற்காக, அவர்களுடைய மொழியையும் வெறுத்த முட்டாள்களல்லவா?) எனவே கோட்சே செய்தது தவறு இல்லை.

//1947 ஆகஸ்டு 15 உண்மையான சுதந்திர நாள் அல்ல. டொமினியன் அந்தஸ்து தரப்பட்ட தினம்தான் அது.//

ஆமாம். அது உண்மையான சுதந்திர நாள் அல்ல. காரணம் ஆங்கிலேயர்கள் சங்பரிவாரத்திடம் ஆட்சி நிர்வாகத்தை ஒப்படைக்கவில்லை. என்று இந்தியா இந்து ராஷ்டிரம் என்று பிரகடணப்படுத்தப்படுகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திர நாள்.

//அவற்றையே திருப்பிச் சொல்வது ஈ.வே.ரா. அவர்கள் கற்றுத் தந்த சுய மரியாதைக்கே இழுக்கு.//

ஈ.வெ.ரா. கற்றுத் தந்த சுயமரியாதையை நாங்கள் பின்பற்றத் தேவையில்லை. காரணம் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று எங்களின் வேதம் கூறிவிட்டது. எங்களைவிட தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மட்டுமே ஈ.வெ.ரா.வின் சுயமரியாதையை பின்பற்ற வேண்டும். சுயமரியாதை என்றால் என்ன என்றெல்லாம் கேட்கக் கூடாது. எங்களுக்குத் தேவைப்படும்போது கூறுவோம். சரி என்று சொல்லவேண்டும். குலத்தொழிலையே கட்டி அழு என்போம். சரி என்று தலையாட்ட வேண்டும். தனியாக டீக்கடை வைத்துக் குடி என்போம். மறு பேச்சு பேசக் கூடாது. சுயமரியாதை என்றால் பொருள் தெரியாத சில வெகுளிகள் இதனையும் சரி என்பர்.

//காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும்.//

பார்ப்பணர்களின் செயல்களுக்கு மட்டுமே ஆழமான நோக்கமெல்லாம் இருக்கும். ஈ.வெ.ரா. பூணுலை அறுத்ததெற்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. ஆர்யர்கள் வந்தேறிகள் என்று சொன்னதெல்லாம் ஆழமான நோக்கம் கொண்டது இல்லை. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தாலிபான்களுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. இராக்கின் மண்ணின் மைந்தர்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து கோட்சே போன்று அமெரிக்கப் படையினரை மட்டுமே குறிவைத்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தினாலும் அவர்களுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. சுமார் 60 ஆண்டுகளாகத் தொடரும் தங்கள் மீதான வந்தேறி இஸ்ரேலியர்களுக்கு எதிர்வினையாக தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனப் போராளிகளுக்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. புலிகள் தங்கள் மீதான அடக்குமுறையை எதிர்த்து தாக்குதல் நடத்துவதெற்கெல்லாம் ஆழமான நோக்கம் இல்லை. (குறிப்பு: ஆழமான நோக்கம் என்றால் மனுதர்மத்தை நிலை நாட்டுவதுதான்)

//இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது.//

நான் என்ன சொல்ல வருகினேன்றால், காந்தியார் கொல்லப்பட்டது நியாயமில்லைதான். ஆனால் கோட்சேவின் பக்கம் நியாயம் இருக்கிறது. கோட்சே ஒரு கொள்கைவாதி. மாறாக காந்தியார் சுயநலவாதி. தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதிலேயே அவர் முழு கவனமுடையவராக இருந்தார். அதற்காக அவர் ஆங்கிலேயர்கள் தரும் புள்ளிவிவரங்களின்படி செயல்படும் மூளையற்றவராக இருந்தார் என்பதுதான் என்னுடைய வாதம்.

//இப்போது மறுபடியும் டோண்டு ராகவன். நான் ஏற்கனவே ஓரிடத்தில் கூறியபடி மலர் மன்னன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். அவர் கூறுவதை பொறுமையுடன் கேட்டால் பல விஷயங்கள் தெரிய வரும்.//

எனவே டோண்டுவாகிய நான் கூறுவதெல்லாம், காந்தியாரை கொலை செய்த கோட்சேயை கொலைகாரன் என்று கூறக்கூடாது. இதுவரை ம.ம. அவர்கள் கூறியபடி காந்தியார் சுயநலத்திற்காகவே செயல்பட்டு, பிராமணர்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள சங்பரிவார் இயக்கங்களின் கையில் அரசு அதிகாரம் போய்ச் சேருவதை தடைசெய்தார். எனவே காந்தியாரை தேசத்தந்தை என்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மாறாக மிகவும் உயர்ந்த ஜாதியாகிய பிராமணர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு தூக்கு மேடை ஏறிய கோட்சேயை தியாகி என்றுதான் நான் கூறுவேன். மீண்டும் சொல்கிறேன். நான் பிராமணன். மற்றவர்களைப் போன்று என் பிராமண அடையாளத்தை வெளிக்காட்ட நான் தயங்கமாட்டேன்.

Thursday, January 19, 2006

பெங்களூரு - இந்து, இஸ்லாம்

பெங்களூரில் உள்ள பேலஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (21-01-06) இரவு 6.30 முதல் இரவு 10 மணி வரை இந்து மற்றும் இஸ்லாமிய புனித நூல்களின் ஒளியில் கடவுள் கோட்பாடு என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடக்க இருக்கிறது.

வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களும் பங்கு கொள்ளும் இந்த கலந்துரையாடலுக்குப் பின், கேள்வி பதில் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இலவசம் என்று சொல்லவேண்டுமோ?

இந்நிகழ்ச்சி பீஸ் டி.வி. (PEACE TV)யில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: www.irf.net

Tuesday, January 17, 2006

"புனிதப்போர் - வருகிறது குயூரோ"

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளை ஒரே ஒன்றியமாக்கி, அந்த ஒன்றியத்திற்கென்று தனி அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி (இன்னும் முழுமை பெறவில்லை என்றே கருதுகிறேன்), அந்த ஒன்றியத்திற்கென்று தனி நாணயத்தை உருவாக்கி மொத்தத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற அடிப்படையில் ஒன்றிணைப்பது என்பது சுமார் 1951ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டமாகும். தற்போது அதில் ஓரளவு வெற்றியும் கிட்டியிருக்கிறது.

பெரும்பாலான உறுப்புநாடுகளால் 1997 ஆம் ஆண்டு முதல் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாணயமான யூரோ அறிமுகப்படுத்தப்படும்போது ஒரு டாலருக்கு ஒரு யூரோ என்றிருந்து பின்னர் சரிவைக் கண்டு, இன்று ஏற்றம் பெற்று 1 யூரோ 1.20 டாலர் என்ற அளவில் உள்ளது. (இதன் பின்னணியில் இருந்தது சதாம் உசேன். இந்த யூரோ டாலர் போட்டியே சதாமின் மீதான தாக்குதலுக்கு அடிப்படைக்காரணம்.)

ஒவ்வொரு துறையிலும் அமெரிக்காவுடன் போட்டியிட்டுக் கொண்டு வந்த ஐரோப்பிய ஒன்றியம் தகவல் துறையிலும் போட்டியைத் துவங்கியுள்ளது. அமெரிக்காவின் கூகிள் மற்றும் யாஹுவுக்கு போட்டியாக தேடுதளம் ஒன்றை அது அமைக்கப் போகிறது. அதன் பெயர்தான் குயூரோ (Quaero).

இது மட்டுமின்றி அமெரிக்காவின் சி.என்.என். தொலைக்காட்சிக்குப் போட்டியானதொரு செய்தி தொலைக்காட்சி சேவையையும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

புத்தாண்டு செய்தியில் தமது ஆட்சியின் இந்த வருடத்தின் செயல்திட்டம் பற்றிக்கூறும்போது, இந்த தேடுதளம் பற்றி கூறிய பிரெஞ்சு அதிபர் இப்படிக் கூறுகிறார்:

'the new geography of knowledge and cultures is being drawn. Tomorrow, that which is not available online runs the risk of being invisible to the world.'

இதனை அமெரிக்காவுடனான தொழில் சார்ந்த போட்டியாக மட்டும் கருத முடியாமைக்கான காரணம், பிரெஞ்சு அதிபரின் இந்த பேச்சும், ஐரோப்பிய ஒன்றியம் தோன்றிய வரலாறும்தான்.

ஐரோப்பிய ஒன்றியம் தோன்றக் காரணமாக இருந்தவர் பிரெஞ்சு அரசியல்வாதியும், கத்தோலிக்க கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், அந்த மதத்தின் புனிதர்களில் ஒருவராக கருதத்தகுந்தவராக குறிப்பிடப்படும் ராபர்ட் சுச்மான் (Robert Schuman) என்பவராவார். அந்த நேரத்தில் (இப்போதும்கூட) அமெரிக்காவில் கிறித்துவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தும், அரசு இயந்திரம் யூதர்களின் கையில் இருந்ததை (இருப்பதை)யும் நாம் கவணிக்க வேண்டும்.

ஆக நாகரீக உலகின் புனிதப்போர் தொடங்கிவிட்டதாகவே கருதலாம்.

Monday, January 16, 2006

ஆயிரம் கோடியும் மோனோ இரயிலும்

ஆயிரம் கோடிக்கு (1000,00,00,000) எத்துனை பூச்சியங்கள் என்று கேட்டால் விரல்விட்டு எண்ணித்தான் சொல்லவேண்டியதிருக்கும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் ஒரு பெரிய தொகையே அல்ல என்பதை சமீபத்திய கருணாநிதியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மோனோ இரயில் திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 20,000 கோடி ரூபாய். அதில் 1,000 கோடி (வெறும் 5சதவீதம்தான்) தமிழகத்தைச் சார்ந்த ஒரு முக்கியப் புள்ளிக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியின்போது தமிழ்நாட்டின் முக்கியப்புள்ளி வேறு யாராக இருக்கமுடியும்?

இந்தக்குற்றச்சாட்டு பொய்யாகவும் இருக்கக்கூடும். ஆனால் கூறப்பட்டுள்ள தொகை மிகப்பெரும் தொகை. (சென்னைக்கு கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கான தொகை). தினகரன் தவிர மற்ற பத்திரிக்கைகளில் இந்தக் குற்றச்சாட்டு இடம்பெறவில்லை. ஒருவேளை இதை கருணாநிதியின் பொங்கல் நையாண்டியாக எடுத்துக் கொண்டார்களோ என்னவோ? அல்லது 1000 கோடி என்பது சிறிய தொகை என்று நினைத்துவிட்டார்களோ?

இக்குற்றச்சாட்டு குறித்து தேர்தலுக்கு முன்பே வெளிமாநிலத்தவரைக் கொண்டு விசாரணை நடத்தவேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும். அவரின் கட்சியை முடக்கவும் செய்யலாம். நிரூபிக்கப்படாவிட்டால் கருணாநிதி தேர்தலில் போட்டியிடுவதை தடைசெய்ய வேண்டும். அதுமட்டுமின்றி விசாரணைக்கு ஆகும் செலவு முழுவதையும் கருணாநிதியை ஏற்கச் செய்யவேண்டும்.

தவறு இன்னும் நடக்கவில்லையே. பேச்சுவார்த்தை நடத்தியதாகத்தானே அவர் கூறியுள்ளார் என வாதிடுவோர் கவனத்திற்கு: ''வருமுன் காப்போம்'' என்பது நோய்க்கு மட்டும்தானா? இது நோயைவிட மிகக் கொடுமையான நோய் அல்லவா? இப்படிச் செய்தால் ஊழல் குறைய வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ஆயிரம் கலாம்கள் வந்து ''இந்திய 2020'' என்று கூறினாலும் பலன் கிடைக்க வாய்ப்பு இல்லை.

நன்றி: தட்ஸ் தமிழ்

Sunday, January 15, 2006

தமிழ்மணமும் பட்டையும்

தமிழ் புத்தாண்டு முதல் மேம்படுத்தப்பட்ட சேவையுடன் தமிழ்மணம் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதற்காக காசி அவர்களுக்கும் அவர்தம் குழுவினருக்கும் நன்றி.

பழைய பதிப்பில் இடுகைகள் தானாகத் திரட்டப்பட்டு வந்தது. இப்போது இடுபவரே சேர்க்கும் முகமாக ''கருவிப்பட்டை'' நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் செயல்முறை புரியாமல் பலர் புலம்பத் தொடங்கியுள்ளனர். அவர்கள் உதவி பகுதியை சரியாகப் படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர்களுக்காக உதவி / தகவல் பகுதியிலிருந்து....

வழமையான தமிழ்மணம் போல் அல்லாமல் இந்தப் புதிய பதிப்பு தானாக இடுகைகளைத் திரட்டுவதில்லை. இரு வழிகளில் நீங்களாக இடுகைகளை சேர்க்கலாம். இதனால் எந்தக் காத்திருப்புமமின்றி, உடனடியாக திரட்டிக்கு உங்கள் புதிய இடுகை பற்றிய தகவல் வந்து சேரும்.

முதல்வழி, 'பதிவு' கருவிப்பட்டை மூலம். உதாரணம் வேண்டுவோர், பத்ரி, கோபி, தங்கமணி ஆகியோருடையதைப் பார்க்கலாம். இப்போது நீங்கள் காணும் பட்டை, வாசகர் பட்டையாகும். சரியாக நிறுவப்பட்டிந்தால் ஒரு புது இடுகையை நீங்கள் எழுதியவுடன், அந்தப் புது இடுகையைத் திறந்ததும், இதே வாசகர் பட்டையினிடத்தில், ஒரு பதிவர் பட்டை கிடைக்கும். அதில் மேலதிகமாக இரு அம்சங்கள் உண்டு.\\முதலில், அங்கே தெரியும் ‘அனுப்பு’ என்ற பொத்தான். இதை அழுத்துவதன்மூலம், உங்கள் புது இடுகை(கள்) தமிழ்மணத்தில் (நந்தவனத்தில்) சேர்க்கப்படுகின்றன. அதே பட்டையில் உள்ள தெரிவுக்கட்டங்களை பயன்படுத்தி, பட்டையில் நீங்கள் விரும்பும் வசதிகளைக் காட்டவோ, மறைக்கவோ செய்யலாம். உதாரணமாக, வாசகர் பரிந்துரை வசதி வேண்டாம் என்று எண்ணுபவர், அதற்குக்கீழ் உள்ள கட்டத்தை தெரிவு விலக்குவதன்மூலம் இதைச் செய்ய முடியும். அல்லாமல் நீங்கள் தமிழ்மணத்தின் பெயரே எங்கும் காட்டக்கூடாது என்று விரும்பும் நன்பரானால் முழுக் கருவிப்பட்டையையுமே மறைக்கலாம்.

இரண்டாவது வழி, டெக்னொரட்டி போல நீங்களாக தமிழ்மணம் (நந்தவனம்) முகப்புக்கு வந்து உங்கள் பதிவின் சுட்டியை (இடுகையின் சுட்டி அல்ல) இடுவதன்மூலமும் உங்கள் புதிய இடுகையை சேர்க்கலாம். யாஹூ வலைப்பதிவுகள் போன்ற பதிவருக்கு முழு உரிமை அளிக்காத அமைப்புகள் வழியாக வலைப்பதிவோர், அல்லது கருவிப்பட்டை நிறுவ இயலாதோர், இதைச் செய்யலாம்.

இரு வழிகளிலுமே, சேர்க்கைக்குப்பின், உடனே, எந்த தலைப்பில் இந்த இடுகை(களைச்) சேர்க்க வேண்டும் எனச் சொல்ல ஒரு வழி இருக்கும். அங்கே உங்கள் தேர்வை சொல்லலாம்.

குறிப்பு: தங்கள் பதிவுகளை பதிப்பித்தவுடன், அந்த குறிப்பிட்ட இடுகையைத் திறந்தவுடன் இவ்வாறு தெரியும். அதில் உள்ள அனுப்பு பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் இடுகை தமிழ்மணத்தில் திரட்டப்படும்.

Saturday, January 14, 2006

பொங்கல் Vs புத்தாண்டு

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வெட்டு அவர்கள் தமிழக இஸ்லாமியர்களை நோக்கி நீங்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நல்லடியாரும் நண்பனும் பதில் அளித்திருந்தனர். இவற்றுக்கு விடையளிக்கும்போது கல்வெட்டு பின்வரும் கருத்துக்களைக் கூறினார்.

பொங்கல் கொண்டாட்டத்துக்கும் எந்தக் கடவுளுக்கும் சம்பந்தமில்லை. இது முழுக்க நன்றி செலுத்தும் திருவிழா. இதனைக் கொண்டாடும் இந்துக்கள் அவர்களின் தெய்வத்துக்கும் சேர்த்து நன்றி செலுத்துகின்றனர். முஸ்லிம்களும் அவர்களின் தெய்வத்துக்கு நன்றி செலுத்தி இதனைக் கொண்டாடலாம். நன்றி செலுத்துவதுதான் இந்தக் கொண்டாட்டத்தின் நோக்கமே தவிர வழிபாடு அல்ல.

பொங்கல் குறித்தான அவரது கண்ணோட்டம் இவ்வாறு அமைந்திருந்தாலும் பொதுவான கண்ணோட்டம் எவ்வாறு உள்ளது என்பதை அறிய பின்வரும் இணைப்புகளைப் பார்வையிடவும்.

http://www.dinamalar.com/2006jan14/tn3.asp
http://www.dinamalar.com/2006jan14/anmegam.asp
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060111150047&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060112114944&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNU20060110062914&Title=Spiritual+Page&lTitle=Bu%C1Lm&Topic=0

இவை மட்டுமின்றி பொங்கலிட சிறந்த நேரம் எது? என்று வேதவாத்தியார்கள் மூலம் கேட்டறிந்து அதனை பத்திரிக்கைளிலும் வெளியிடுகின்றனர். எனவே பொங்கல் என்பது இன்றைய சூழலில் இந்து மதத்தின் ஒரு பண்டிகையாகவே ஆக்கப்பட்டுவிட்டது. (ஆனால் பிராமணர்கள் இதனைக் கொண்டாடுவதில்லை என்பது வேறு விடயம்) எனவே முஸ்லிம்கள் தற்போதுள்ள செயல்முறைகள் மற்றும் சொல்லப்படும் காரணத்தின் அடிப்படையில் பொங்கல் பண்டிகையை (பண்டிகை தமிழ் வார்த்தை அல்ல என்று வாசித்த நினைவு) கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

தமிழா உனக்கென்று ஒரு பொதுவான கொண்டாட்டம் என்ன இருக்கிறது? என்று கேட்கும் கல்வெட்டு, தமிழ் ஆண்டு என்றிலிருந்து துவங்குகிறது என்பதைக்கூட அறியாதவராக இருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது.

எனினும் அவரின் தமிழர் ஒருங்கிணைப்பைப் பாராட்டும் அதே வேளை, முதலில் தமிழ்ப்புத்தாண்டு நாள் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடம் ஏற்படுத்தி அதனையே தமிழர் திருநாளாக கொண்டாட உரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். கொண்டாடப்படும் முறை இஸ்லாமிய கடவுள் கொள்கைக்கு மாற்றமாக இராதபோது அதற்கான முயற்சியில் கல்வெட்டுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளேன்.
மீண்டுமொரு முறை ''புத்தாண்டு வாழ்த்துக்கள்''


எழுதத் தூண்டிய பதிவுகள்
http://muthukumaran1980.blogspot.com/2006/01/blog-post_13.html
http://thamizhinam.blogspot.com/2006/01/blog-post.html